சிறுமியை சித்ரவதை செய்ததாக, நடிகை பானுப்பிரியா மீது சென்னை பாண்டி பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தியாகராயநகர் விஜயராகவா சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் பிரபல நடிகை பானுப்பிரியா வீட்டில், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பெத்தபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வேலை செய்தார். இந்நிலையில் பானுப்பிரியா வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், ஐ-பேடு, கேமரா, இரு விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை திருடப்பட்டன.
இதில் அவர் வீட்டில் வேலை செய்யும் அந்த சிறுமியும், அவரது தாயும் சேர்ந்து அந்த நகையைத் திருடியதாக பானுப்பிரியா குடும்பத்தினர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த சிறுமியையும், சிறுமியின் தாயாரையும் கைது செய்தனர். அதேவேளையில், சிறையில் இருந்து வெளியே வந்த அந்த சிறுமி, தன்னை பானுப்பிரியாவும், அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்ததாக ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் சமன்கோட்டா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அப் புகாரின் அடிப்படையில் ஆந்திர போலீஸார் பானுப்பிரியா, அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சம்பவங்கள் நடைபெற்றது சென்னை காவல்துறையின் பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் அந்த வழக்கு பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து பாண்டி பஜார் போலீஸார் ஏற்கெனவே ஆந்திர போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், புதிதாக பானுப்பிரியா, கோபாலகிருஷ்ணன் மீது சிறார் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக பானுப்பிரியாவையும், கோபாலகிருஷ்ணனையும் போலீஸார் தேடி வருகின்றனர்.