நடிகர் ஜெயம் ரவியின் பாதுகாவலருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் புகார் அளித்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நந்தனத்தில் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளர் செ.வின்சென்ட் (53), சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரில், தங்களது நிறுவனத்தின் மூலம் மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியத்துக்கு பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஜெயம் ரவிக்கு துப்பாக்கியுடன் இரு பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் உதவியாளர் சேஷாத்திரி, இரு பாதுகாவலர்களுக்கும் ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்கவில்லை. மேலும் மே மாதம் முதல் இருவரையும் வேலையில் இருந்து திடீரென நீக்கிவிட்டனர். எனவே ஜெயம் ரவியிடமிருந்து இருவருக்கும் சேர வேண்டிய சம்பள பாக்கியை பெற்றுத் தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.