அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் முதல்முறையாக குளிர்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 39 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
இவை கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 15 வழித்தடங்களில் விரைவில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.109 கோடி மதிப்பிலான 370 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தார். இதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 65 பேருந்துகள் வழங்கப்பட்டன. இதில் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட 39 பேருந்துகள், சென்னையில் இருந்து குருவாயூர், குட்டம், செங்கோட்டை, பெங்களூரு, தூத்துக்குடி, நாகர்கோயில், திருநெல்வேலி பகுதிகளுக்கும், வேளாங்கண்ணி - எர்ணாகுளம், மதுரை - புதுச்சேரி, தூத்துக்குடி - பெங்களூரு, கன்னியாகுமரி - திருப்பதி உள்ளிட்ட வழித்தடங்களிலும் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1 எனவும், படுக்கைகளுக்கு கிலோமீட்டருக்கு ரூ. 1.45, வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ரூ.1.55 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர கழிவறை வசதி கொண்ட 21 பேருந்துகள் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், வேளாங்கண்ணி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை - திருச்சி வழித்தடத்துக்கு மட்டும் கழிவறை வசதி கொண்ட 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை- திருச்சி, சென்னை - தூத்துக்குடி வழித்தடத்தில் 5 குளிர்சாதன இருக்கை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் விரைவில் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.