தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சான்றிதழ்கள் விவகாரம்: அண்ணா பல்கலை. உத்தரவு ரத்து

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்களின் அசல் சான்றிதழ்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்களின் அசல் சான்றிதழ்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியன்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் அசல் சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைத்தால் பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு பணிக்குச் செல்ல நேரிடும். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் இந்த சுற்றறிக்கை அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தனது உத்தரவில் தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ராஜிநாமா செய்யும்போது அவர்களது அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். ஒருவேளை அசல் சான்றிதழ்களைத் திரும்ப வழங்க மறுத்தால் அந்தக் கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை எந்தக் காரணம் கொண்டும் கல்லூரி நிர்வாகங்கள் தங்களிடம் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும், சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பின்னர் அவற்றை சம்பந்தப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் என்ன அறிவுறுத்தியுள்ளதோ அதை மீண்டும் சுற்றறிக்கையாக பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com