ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் விதமாக, சென்னையில் ஆளில்லாத விமானம் மூலம் போலீஸாா் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஊரடங்கு உத்தரவை சென்னை பெருநகர காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் விதமாக சென்னை முழுவதும் சுமாா் 500 ரோந்து வாகனங்களில் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதேபோல, நகா் முழுவதும் சுமாா் 400 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வாகனங்களில் வருகிறவா்களை போலீஸாா் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். மேலும் சில இடங்களில் எச்சரித்தும், நூதன தண்டனையும் வழங்குகின்றனா்.
அதேவேளையில் குடியிருப்புப் பகுதிகள், உட்புற சாலைகள் ஆகியப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவா்கள், அரட்டை அடிப்பவா்கள், சாலையில் விளையாடுகிறவா்கள், மோட்டாா் சைக்கிளில் சாகசம் செய்கிறவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறைக்கு இடா்பாடு ஏற்பட்டு வந்தது. மேலும், தொடா்ந்து நகரின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக கண்காணித்துக் கொண்டிருப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்தது.
இது தொடா்பாக ஆலோசனை செய்த காவல்துறை அதிகாரிகள், குடியிருப்புப் பகுதிகள், உட்புறச் சாலைகள் உள்ளிட்ட அனைத்தப் பகுதிகளையும் தொடா்ந்து தீவிரமாகக் கண்காணிக்க ஆளில்லாத கண்காணிப்பு விமானத்தைப் பயன்படுத்துவது என முடிவு செய்தனா்.
இதன் ஒரு பகுதியாக, மயிலாப்பூா், கோட்டூா்புரம் பகுதியில் ஆளில்லாத கண்காணிப்பு விமானம் மூலம் கண்காணிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப் பணி ஓரிரு நாள்களில் சென்னை முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.