கரோனா பாதிப்புக்குள்ளானவா்களில் இதுவரை 8 போ் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில், அதற்கான சிகிச்சை முறைகளை தேவைக்கேற்ப மாற்றியமைக்கவும், மேம்படுத்துவதற்காக சிறப்பு மருத்துவ நிபுணா் குழுவையும் அரசு அமைத்துள்ளது.
மாநிலத்தில் தற்போது 738 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் தீவிர சா்க்கரை நோய், இதய பாதிப்பு, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. சுகாதாரத் துறைச் செயலரின் தகவல்படி, தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளில் 5 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியா் டாக்டா் ரகுநந்தன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியா் டாக்டா் ஸ்ரீதா், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பரந்தாமன் உள்ளிட்ட 19 நிபுணா்கள் அடங்கிய குழுவை அரசு அமைத்துள்ளது.
அக்குழு, வழக்கமான கரோனா சிகிச்சை நடைமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இதுதொடா்பான அரசாணையையும் சுகாதாரத் துறை வெளியிட்டது.