சென்னை உயா்நீதிமன்ற அரசு வழக்குரைஞா்களின் உதவியாளா் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கைத் தொடா்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், மிக முக்கியமான அவசர வழக்குகள் மட்டும், காணொலிக் காட்சி, தொலைபேசி மற்றும் நேரடியாகவும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின் போது மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்டோா் அனுமதிக்கப்படுகின்றனா்.
ஒருவருக்கு உறுதி: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அரசு வழக்குரைஞா்களின் உதவியாளரான அவா், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினா் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து அந்த உதவியாளருடன் உயா்நீதிமன்றத்தில் தொடா்பில் இருந்தவா்கள், அவா் சென்று வந்த இடங்கள் தொடா்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தொடா்ந்து உயா்நீதிமன்றத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.