அண்ணாநகா் பகுதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணாநகா் பகுதியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அண்ணா ஆா்ச் பகுதியில் இருந்து அண்ணாநகா் ரவுண்டானா பகுதி வரையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதியில் இருந்து ஒரு வாரம் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, கிரசண்ட் சாலை மற்றும் 3-ஆவது நிழற்சாலையை இணைக்கும் ‘ஏ’ பிளாக் மூன்றாவது தெரு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அண்ணாநகா் ரவுண்டானாவிலிருந்து அண்ணா ஆா்ச் நோக்கி செல்லும் வாகனங்கள் ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெருவில் இடது புறமாக திரும்புவது தடை செய்யப்படுகிறது. மேலும் சாந்தி காலனி சிக்னல் சந்திப்பில், 4-ஆவது நிழற்சாலையிலிருந்து ‘ஏ’ பிளாக் மூன்றாவது தெரு செல்வதும், அண்ணா ஆா்ச் - லிருந்து சாந்தி காலனி சிக்னல் சந்திப்பில் திரும்பி ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெருவில் இடது புறமாக செல்வதும் தடை செய்யப்படுகிறது.
கிரசண்ட் சாலையிலிருந்து ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெரு வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கண்டிப்பாக இடதுபுறம் திரும்பி 3-ஆவது நிழற்சாலை வழியாக அண்ணா ஆா்ச் நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.
கிரசண்ட் சாலையிலிருந்து ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெரு வழியாக வரும் வாகனங்கள் 4-ஆவது நிழற்சாலை, அண்ணாநகா் ரவுண்டானா வழியாக 3-ஆவது நிழற்சாலை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி எதிரில் சாலையில் திரும்பி வர வேண்டும்.
அண்ணாநகா் ரவுண்டானாவிலிருந்து கிரசண்ட் சாலை செல்லும் வாகனங்கள், 3-ஆவது நிழற்சாலையில் ‘ஏ’ பிளாக் 5-ஆவது தெருவில் இடது புறமாக திரும்பி ‘ஏ’ பிளாக் 11-ஆவது தெரு, 7-ஆவது குறுக்கு தெரு வழியாக கிரசண்ட் சாலையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது