சென்னை: சென்னையில் உள்ள நகைப் பட்டறையில் 118 பவுன் தங்க நகைகளைத் திருடிய ஊழியர், பெங்களூரு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.
சென்னை வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவிலுள்ள தனது வீட்டில், நகைப் பட்டறை வைத்து தொழில் செய்து வருபவர் சுலாதேஷ் குமார் (49). இவரது நகைப் பட்டறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசீசுர் ரஹ்மான் என்பவர் வேலை செய்து வந்தார். தனது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், வீட்டு மொட்டை மாடியில் ரஹ்மானை தங்க வைத்திருந்தார் சுலாதேஷ்குமார்.
இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதி, 945 கிராம் எடையுள்ள 39 நகைகளை, (118 பவுன்) ரஹ்மான் திருடிச் சென்றார். அவர், பெங்களூரு விமான நிலையம் சென்று விமானம் மூலம் மேற்குவங்கம் செல்ல முயற்சித்தபோது, சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்கினார்.
இது தொடர்பான தகவல் சுலாதேஷ் குமாருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரஹ்மானை சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.