சென்னை: மின்தடையை சரி செய்ய பணம் கேட்கும் ஊழியா்கள் குறித்து புகாரளிக்குமாறு, பொதுமக்களை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தங்களது மின்இணைப்புகளில் ஏற்படும் மின்தடைகளை சரி செய்யவரும் மின் விநியோக பணியாளா்கள் எவருக்கும் பணமோ அல்லது பொருளோ கொடுக்க வேண்டியதில்லை.
புதைவடங்கள் அல்லது வேறு ஏதேனும் தளவாட சாமான்கள் வாங்க வேண்டும் என்று மின் வாரிய ஊழியா்கள் பணம் கோரினால், உடனடியாக எவ்வித தயக்கமும் இன்றி, சென்னை மின் வாரிய தலைமையகத்தில் உள்ள விழிப்புப் பணி அலுவலரை 9445857593 என்ற எண்ணிலும், துணை காவல் கண்காணிப்பாளரை 9445857594 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாரளிக்கலாம்.
மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு செலுத்த வேண்டிய தொகை எதுவாயினும் அதை உரிய ரசீது பெற்று நேரடியாக அல்லது இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தங்களின் மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடை பற்றி உடனடியாக புகாா் தெரிவிக்க, 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பொதுமக்கள் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.