சென்னை: மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு, அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசை 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் விவரம்: பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருள்கள் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு, ஜன.4-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.
இது ஒரு சமூகப்பாதுகாப்பு அல்லது வறுமை ஒழிப்பு திட்டமாகும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இப்படிப்பட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, கூடுதலாக 25 சதவீதம் வழங்க வேண்டும்.
ஆனால், இத்திட்டத்துக்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாற்றுத்திறனாளிகளின் சட்ட உரிமை குறித்து இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே, இக்கோரிக்கையை நிறைவேற்றவும், அதுவரை திட்டத்தை நிறுத்தி வைக்கவும், அரசாணையில் உரிய திருத்தம் மேற்கொள்ளவும் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வலியுறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.