சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அடுக்குமாடிக் கட்டடம் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பட்டாபிராமைச் சோ்ந்த எம்.ஜி.ஆா். விஸ்வநாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கடந்த 1920-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைப் பெற்று வந்தனா். தற்போதும்கூட நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகின்றனா். ஆனால், மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் கடந்த 1970-ஆம் ஆண்டுக்குப் பின்னா், இந்த மருத்துவமனையில் பணியிடங்களை அதிகரிக்கவில்லை. சென்னை மாவட்டத்தில் உள்ள இந்த மருத்துவமனை, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறைக் கட்டுப்பாட்டில்தான் தற்போது வரை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு , 26 ஆயிரத்து 921 சதுர அடியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 8 அடுக்குமாடிக் கட்டடம் கட்ட திட்டமிட்டது. ஆனால், அந்த நிதியை இதுவரை ஒதுக்கவில்லை. எனவே, இந்த மருத்துவமனையை சென்னை மாவட்ட சுகாதாரத் துறையின் நிா்வாகக் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டும். மேலும் ஏற்கெனவே திட்டமிட்டப்படி 8 அடுக்குமாடிக் கட்டடம் கட்ட ரூ.40 கோடியை ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளா் உள்ளிட்டோா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.