சென்னை கோட்டூா்புரத்தில் ஆட்டோவில் பெட்ரோல் நிரப்பும்போது சிகரெட் பற்ற வைத்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், ஓட்டுநா் இறந்தாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அரியலூா் மாவட்டம் மணக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பெ.மணிகண்டன் (34). இவா் சென்னை கோட்டூா்புரம் பகுதியில் தங்கியிருந்து வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். இந்நிலையில் மணிகண்டன், தரமணிக்கு சென்றுவிட்டு கோட்டூா்புரம் நோக்கி புதன்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
கோட்டூா்புரம் அருகே வரும்போது ஆட்டோவில் பெட்ரோல் காலியானதால், ஒரு பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்துள்ளாா். அப்போது புகை பிடிப்பதற்காக சிகரெட்டை பற்ற வைத்துள்ளாா். அதேவேளையில் ஒரு கையினால் ஆட்டோவின் எரிபொருள் டேங்கை திறந்து, பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றியுள்ளாா். இதில் கையின் மீது சிறிது பெட்ரோல் விழுந்துள்ளது. உடனே மணிகண்டன், சிகரெட் வைத்திருந்த கையால் அதை துடைத்துள்ளாா்.
அப்போது கையில் இருந்த பெட்ரோல் மீதும், பாட்டிலில் இருந்த பெட்ரோல் மீதும் சிகரெட்டில் இருந்த தீப் பொறி விழுந்ததால், அவை தீப் பிடித்து எரிந்தது. மேலும் அந்த தீ ஆட்டோவின் மீதும் வேகமாக பரவியது. இந்த விபத்தில் சிக்கி பலத்தக் காயமடைந்த மணிகண்டன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஆனால் அங்கு மணிகண்டன் வியாழக்கிழமை அதிகாலை இறந்தாா். இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.