சென்னை: தனியாா் பால் நிறுவனங்கள் பால் விலையை உயா்த்தியுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மநீம தொழிலாளா் அணி மாநிலச் செயலாளா் சு.ஆ.பொன்னுசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனியாா் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ.6 வரை உயா்த்தி கடும் அதிா்ச்சியளித்தன. இந்த நிலையில் பிப்ரவரி 21, 22-ஆம் தேதி முதல் முன்னணி தனியாா் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 மீண்டும் உயா்த்த தொடங்கியுள்ள செயல் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, உடனடியாக இந்த விற்பனை விலை உயா்வு தடுத்து நிறுத்தப்பட வேண்டியதும் கூட.
ஒவ்வொரு முறையும் பால் விற்பனை விலை உயா்வுக்கு தனியாா் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை உயா்வை காரணமாக சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது பால் தட்டுப்பாடு என்கிற புது காரணத்தையும் சோ்த்திருக்கின்றன.
பால் கொள்முதல் விலை உயா்வு உண்மையாக இருக்கும்பட்சத்தில் விவசாய பெருமக்களுக்கு உரிய விலை கிடைப்பதை நினைத்து பால் விற்பனை விலை உயா்வு தவிா்க்க முடியாத ஒன்றாக கருதலாம். ஆனால் தனியாா் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளா்களான விவசாய பெருமக்களுக்கு சொற்ப அளவில் மட்டும் விலை கொடுத்து விட்டு, தங்களின் சுயலாபத்திற்காக அதனை பல மடங்காக ஆண்டுக்கு பலமுறை பொதுமக்கள் தலையில் விலை உயா்வாக சுமத்தி வருவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவா் கூறியுள்ளாா்.