தற்கால திரைப்பட இயக்குநர்களுக்குத் தேவையான கதைக்கருவுடன் நாவல்கள், சிறுகதைகள் வருகின்றனவா என்ற கேள்விக்கு பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அளித்த பதில்:
தற்கால சூழல்களுக்கு ஏற்ப இளம் எழுத்தாளர்கள் படைப்புகளை உருவாக்கி வருகின்றனர் என்பது உண்மை. அவர்களது படைப்புகளை திரைப்படத்துறையினர் படித்துப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.
சமீபத்தில் வானதி பதிப்பகத்தில் வெளியான "திரெளபதியின் சபதம்' என்னும் நூல் சிறுமியர் பாலியல் பிரச்னை சம்பந்தப்பட்டிருந்ததை படித்தபோது வியப்பாக இருந்தது. நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு தரும் வகையில் அந்த நாவலை மீனாட்சிஅடைக்கப்பன் என்பவர் எழுதியிருந்தார். இதுபோலவே பல புதிய எழுத்தாளர்களின் படைப்புகளும் தற்கால பிரச்னைகளைப் பேசுவதாகவே அமைகின்றன.
நாவலாசிரியர்களில் சிவசங்கரியின் "ஒரு மனிதனின் கதை', புஷ்பாதங்கதுரையின் "ஒரு ஊதாப்பு கண்சிமிட்டுகிறது', மணியனின் "மோகம் முப்பது வருஷம்' ஆகியவை படமாக்கப்பட்டன. ஜெயகாந்தனின் பல கதைகள் படமாகியுள்ளன. சமீபத்தில், நாவல்களை படமாக்குவதில் இயக்குநர் வெற்றிமாறன் ஆர்வம் காட்டி வெற்றி பெற்று வருகிறார்.
திரைத்துறைக்கு இயக்குநராக வருவோர் நல்ல நாவல்கள் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகளை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பது அவசியம். திரைப்படங்களுக்கான கதை களத்துக்கு தற்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது தவறானது.
டாக்டர் மு.வரதராஜனாரின் கதைகளில் கூட தற்காலத்துக்கான பிரச்னைகளுக்குத் தீர்வு உள்ளது. அதைக் கூட படமாக்கலாம். தமிழில் பழைய எழுத்தாளர்களின் படைப்புகளும், புதிய எழுத்தாளர்களின் படைப்புகளும் சமூகத்தின் நிதர்சனத்தை காட்டும் ஏராளமான கருத்துகளை உள்ளடக்கியே உள்ளன.