இன்றைய தமிழ் இலக்கியங்களில் மொழிச்செறிவு இல்லை என்ற வாசகர்களின் குற்றச்சாட்டு குறித்து சாகித்ய அகாதெமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியது:
தமிழ் இலக்கியத்தில் புதிய கவிஞர்கள் வருகை என்பது வழக்கமான ஒன்று. ஆனால், சமீப காலங்களில் நாவல் எழுத்தாளர்கள் அதிகம் வந்திருப்பது வரவேற்புக்குரியது. மொழியில் மரபின் தொடர்ச்சி இருந்தால்தான் மொழித்திறன் எழுத்தில் வெளிப்படும்.
தமிழ் இலக்கியம் என்பது மிகப் பழைமையான பாரம்பரியத்தை உள்ளடக்கியது. ஆகவே புதிதாக தமிழில் எழுத வருகிறவர்கள் தங்களுக்கான முன்னோடியை முதலில் அடையாளம் காண்பது அவசியம். அதன்பின் அந்த முன்னோடியின் படைப்புகளை ஆழ்ந்து படிக்கவேண்டும். ஆனால், பெரும்பாலும் யாரும் தற்போது ஆழ்ந்து படிப்பதில்லை. தங்களுக்கான அனுபவம், கேள்விப்பட்ட செய்திகள் அடிப்படையில் இலக்கியத்தைப் படைக்க முயற்சிக்கின்றனர்.
சிலையை வடிக்கும் தேர்ந்த சிற்பி கூட அதற்கு கண் திறக்கும் முன்பு அந்தச் சிலை முழுமையாக, சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என பார்த்து, அதன்பின் கடைசியாகத்தான் கண் திறப்பார். ஆகவே படைப்புகளும் மொழித்திறன் உள்ளிட்ட அனைத்திலும் முழுமையடைந்திருக்கிறதா என்பதை அந்தந்த படைப்பாளிகளே பார்த்துக் கொள்ளவேண்டும்.
தற்கால இளந்தலைமுறையினருக்கு வீடுகள், கல்வி நிலையங்களில் தமிழ் இலக்கிய வாசிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருவது உண்மை. ஆகவே வாசிப்பு என்பது பெயரளவுக்கே உள்ளது. பெற்றோர் வாசிக்கும் பழக்கத்துடன் இருந்தால்தானே பிள்ளைகள் படிப்பர். ஆகவே வீடுகளில் ஆளாளுக்கு கைபேசியைப் பயன்படுத்தும் நேரத்தில் வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியமாகும்.
இலக்கிய வாசிப்பு என்பது வகுப்பறை பாடப் புத்தகங்களைப் போல படிப்பதல்ல. அது அறிவைத் தேடிக் கண்டறியும் தவமுறையாகும். ஆகவே வரலாறு, இலக்கியம், பண்பாடு என பொதுத் தளங்களை அறிய வாசிப்பு அவசியம். படித்தால் பண்டிதனாகலாம் என்பதுபோல எழுத்துத் துறையிலும் சாதிக்கலாம்.