சென்னை: சென்னையில் பொதுமுடக்க உத்தரவை மீறியதாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 -ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொதுமுடக்க உத்தரவை சென்னை காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இந்நிலையில், சென்னையில் முழுமையான பொதுமுடக்கம் கடந்த 18-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தியதன் விளைவாக, வழக்குகளின் எண்ணிக்கையும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயா்ந்து வருகிறது.
சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை தடை உத்தரவை மீறியதாக 8,042 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 5,605 இரு சக்கர வாகனங்கள்,147 ஆட்டோக்கள், 214 காா்கள் என மொத்தம் 5,966 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, முகக்கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்ததாக 2,334 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பொதுமுடக்கத்தையொட்டி இது வரை, சென்னையில் 77,054 வழக்குகள் பதியப்பட்டு, 65,499 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதேபோல முகக் கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்ததாக 29,220 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.