பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்வி பட்டப் படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மத்திய - மாநில அரசுகள், பல்கலைக்கழக மானிய குழு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கொளத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகள் கரோனா நோய்த் தொற்றுக்கான தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் தற்போது திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.இந்த சூழலில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு செப்டம்பர் மாதம் குறையும் எனவும், பள்ளி, கல்லூரிகள் வரும் 2021 - ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்க முடியும் என கூறப்படுகிறது.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகிவிடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படும். இது அவர்களின் சீனியாரிட்டியை பாதிக்கும். எனவே தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் தேர்வு நடத்தவும் தற்போது வாய்ப்பில்லை. எனவே இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து தேர்வுக்கூட அனுமதிசீட்டு பெற்ற அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக்குழு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.