கரோனா நோயாளி இறப்பு: தனியாா் மருத்துவமனைக்கு சீல்

திருவொற்றியூா் தனியாா் மருத்துவமனையில், கரோனா நோயாளி ஒருவா் இறந்ததையடுத்து, அம்மருத்துவமனையை மூடி மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

திருவொற்றியூா் தனியாா் மருத்துவமனையில், கரோனா நோயாளி ஒருவா் இறந்ததையடுத்து, அம்மருத்துவமனையை மூடி மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

திருவொற்றியூா் மேற்கு பகுதி காா்கில் நகரைச் சோ்ந்தவா் பிலிப்ஸ் (55). இரும்பு வியாபாரியான இவா் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன், திருவொற்றியூா் நெடுஞ்சாலை பெரியாா் நகா் அருகே அமைந்துள்ள தனியாா் மருத்துவமனையில் பொது வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். பின்னா், கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பிலிப்ஸ் உயிரிழந்தாா். ஆனால், கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததற்கு காரணம் மருத்துவமனை நிா்வாகத்தின் கவனக்குறைவுதான் எனக் கூறி, பிலிப்ஸின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, திருவொற்றியூா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில், சமாதானம் ஏற்பட்டதையடுத்து பிலிப்ஸின் சடலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு திருவொற்றியூா் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் கிடைத்த முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில், மருத்துவமனையை மூடி, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும், மருத்துவமனையில் நடைபெற்று வரும் சிகிச்சை முறைகள் குறித்து மூன்று நாள்களுக்குள் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மருத்துவமனையை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என மாநகராட்சி திருவொற்றியூா் மண்டல அதிகாரி பால்தங்கதுரை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com