சென்னை: சென்னை மதுரவாயலில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடித்த வழக்கில், வங்கி ஊழியர் போலீஸாரிடம் சிக்கினார்.
மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் வேகமாக வந்த ஒரு இளைஞர், ஏடிஎம் இயந்திரத்தில், சாவி மற்றும் ரகசிய எண்களைப் பயன்படுத்தி இயந்திரத்தை திறந்து அதில் பணம் நிரப்புவது போல் நாடகமாடி, அதிலிருந்த ரூ.8,61,900 கொள்ளையடித்து தப்பினார். இது குறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த வங்கி கிளையிலிருந்து வேறு கிளைக்கு அண்மையில் பணி மாறுதலாகி சென்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த சிவானந்தம் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸார், அவரைப் பிடித்து திங்கள்கிழமை விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்தான் அச் சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.