சென்னை: இந்து மதம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கும் "காட்மேன்' தொடரை தயாரித்த தயாரிப்பாளர், இயக்குநர் மீது சைபர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்த விவரம்: "காட்மேன்' என்ற இணையத்தளத் தொடர் ஒரு தனியார் நிறுவனத்தின் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 12-ஆம் தேதி வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தொடரை இளங்கோவன் தயாரித்திருந்தார், பாபு யோகேஸ்வரன் இயங்கியிருந்தார். இதில் நடிகர்கள் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடருக்கான முன்னோட்டமாக கடந்த வாரம் டீசர் வெளியிடப்பட்டது. அதில் இந்து மதத்தின் மீது அவதூறு பரப்பும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினரும், இந்து இயக்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த தொடர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக வழக்குரைஞர் அணிச் செயலர் அ.அஸ்வத்தாமன் சென்னை பெருநகர காவல்துறையில் கடந்த 27-ஆம் தேதி ஒரு புகார் அளித்தார்.
6 பிரிவுகளில் வழக்கு: இந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் புகாருக்கான முகாந்திரம் இருந்ததினால், தயாரிப்பாளர் இளங்கோவன், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக தயாரிப்பாளர் இளங்கோவன்,பாபு யோகேஸ்வரன் ஆகியோர் ஜூன் 3-ஆம் தேதி சைபர் குற்றப்பிரிவில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.