சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்குப் பின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை (ஜூன் 1) வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
பொது முடக்கத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகள் மட்டுமே காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வழக்குரைஞர்கள் அனைத்து வகையான வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்கக் கோரி வந்தனர்.
இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து வகையான வழக்குகளும் திங்கள்கிழமை (ஜூன் 1) காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டது.
இதுவரை நீதிபதிகள் தங்களது இல்லங்களில் இருந்தே அவசர வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற அறைகளில் அமர்ந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்தனர்.