வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்க என்ன திட்டம் உள்ளது? உயர்நீதிமன்றம் கேள்வி

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்க என்ன திட்டம் உள்ளது? உயர்நீதிமன்றம் கேள்வி

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்க என்ன திட்டம் உள்ளது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்க என்ன திட்டம் உள்ளது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60 ஆயிரத்து 942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன. 

ஆனால் தமிழக அரசு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இதனால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 2 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் லட்சக்கணக்கான இந்தியர்களும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களை அணுகி, இந்தியாவுக்கு அனுப்ப கோரி வருகின்றனர். மத்திய அரசு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர நடைமுறைகளை வகுத்துள்ள நிலையில்
தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க மாநில அரசு அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் விவரங்கள், இதுவரை இந்தியாவிலும், தமிழகத்திலும் இயக்கப்பட்ட விமானங்கள் எத்தனை, வெளிநாடுகளில சிக்கியுள்ள எஞ்சியவர்களை மீட்க இந்திய அரசின் திட்டம் என்ன, அங்கு சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் என்ன என்பது  உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் தமிழக விமான நிலையங்களில் தரையிறங்க  எத்தனை விமானங்களுக்கு அனுமதி கோரப்பட்டது, அந்த கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும்  உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூன் 19 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com