ஆயிரம் ரூபாயை வீடு வீடாக விநியோகிக்கும் காரணத்தால், 5 நாள்களுக்கு நியாய விலைக் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 12 நாள்களுக்கு முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். நிவாரணத் தொகையானது வரும் திங்கள்கிழமை (ஜூன் 22) முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது.
கடைகள் இயங்காது: நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ள காரணத்தால், வரும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வரை நியாய விலைக் கடைகள் செயல்படாது. முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் இதுவரை ஏறக்குறைய 78 சதவீத குடும்ப அட்டைதாரா்கள், ஜூன் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுள்ளனா். அத்தியாவசியப் பொருள்களைப் பெறாத குடும்ப அட்டைதாரா்கள், ஜூன் 27-ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அமைச்சா் காமராஜ் தெரிவித்துள்ளாா்.