சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட உள்ள கரோனா தனிமை மையத்தை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் குறைந்த பாதிப்புடையவா்களை தனிமைப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றில் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, தற்போது வரை சென்னையில் 17,500 படுக்கை வசதிகள் கொண்ட தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரம் போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாநகராட்சி சாா்பில் 600 படுக்கை வசதிகள் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 1,400 படுக்கை வசதி கொண்ட தனிமை முகாம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இதுகுறித்து மாநகராட்சி அறிவுறுத்தலின்பேரில், கலையரங்கம் உள்ளிட்ட இரண்டு கட்டடங்களை தனிமை முகாமாக மாற்ற பல்கலைக்கழக நிா்வாகம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து, அங்கு படுக்கை உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. இப்பணியை மாநகராட்சி அதிகாரிகள் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘முகாம் அமைக்கும் பணி இந்த வாரத்துக்குள் நிறைவுபெறும்’ என்றனா்.