பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு என தனியாக நல வாரியம் தொடங்கவும், நிவாரண உதவிகள் வழங்க கோரிய வழக்கை வரும் ஜூலை 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் தலைவர் குகேஷ் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்தின் காரணமாக கோயில்கள் மூடப்பட்டன. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் தடை விதிக்கப்பட்டது.
இதனால் இந்த சுப நிகழ்வுகளில் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைக்கும் இசை கலைஞர்கள் வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்.மேலும் நாதஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், வீணை போன்ற வாத்திய இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும் என தனியாக நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில், தமிழ் நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு ஏற்கனவே நல வாரியம் உள்ளது. மேலும் பாரம்பரிய இசை கலைஞர்களுக்கு நிவாரணம் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.