பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சட்டப் பிரிவினர் சார்பில் மாட்டு வண்டியில் பயணித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொதுமுடக்கம் காரணமாக எரிபொருள் தேவை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 83.63 ரூபாய்க்கு விற்பனையானது.
டீசல் லிட்டர் ஒரு லிட்டர் 77.72 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வை கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டப்பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் எதிரே, மாட்டு வண்டியில் பயணித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் என். அருள் பத்தைய்யா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஆர்.சுதா உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் - டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.