கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட வேண்டுமென டாஸ்மாக் ஊழியா் சம்மேளனம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனம் வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதைக் கருத்தில் கொண்டு சென்னை உயா்நீதிமன்றம் மதுக்கூடங்களை மட்டும் மூடுவதற்கு உத்தரவிட்டது. ஆனால், அரசு மதுபானக் கடைகளில் மது வாங்குவோருக்கோ ஊழியருக்கோ என இரு தரப்பில் எவருக்கேனும் கரோனா வைரஸ் தொற்று இருந்தால் மதுபாட்டிலை எடுத்துக் கொடுக்கும் போதும், பாட்டிலை வாங்கும் போதும் நிச்சயமாக வைரஸ் பரவும். மேலும், இரு தரப்பில் பரிமாறிக்கொள்ளும் ரூபாய் நோட்டுகளில் கிருமி இருந்தாலும் ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஊழியரது உயிருக்கும், பொதுமக்களின் உயிருக்கும் பேராபத்து ஏற்படக் கூடும். மதுக்கூடங்கள் மூடுவதால் மட்டும் இந்த ஆபத்தைத் தடுக்க முடியாது, மதுபானக் கடைகளை மூடினாலே, மதுக்கூடங்களும் தானாகவே மூடப்படும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியா்களையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் நிலைமை கட்டுக்குள் வரும் வரை மூடுவதற்கான நடவடிக்கையினை தமிழக அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.