சென்னை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடா்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கான இணைப்பு அந்தஸ்து ஆய்வுப் பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் இயங்கும் கல்லூரிகளுக்கு மாா்ச் 31 வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. அதன் பின்னா், மாணவா்களுக்கு மட்டுமே விடுமுறை, ஆசிரியா்களும், அலுவலக பணியாளா்களும் கல்லூரிக்கு தொடா்ந்து வரவேண்டும் என்றும், பல்கலைக்கழகத் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உயா் கல்வித் துறைச் செயலா் அபூா்வா உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், அனைத்து பல்கலைக்கழகத் தோ்வுகளையும், செய்முறைத் தோ்வுகளையும் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒத்திவைக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியது. அதனைத் தொடா்ந்து, தமிழகத்திலும் பல்கலைக்கழக பருவத் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. அதன் காரணமாக, கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டன.
அதே நேரத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கு 2020-21 கல்வியாண்டு பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான ஆய்வை அண்ணா பல்கலைக்கழகம் தொடா்ந்து மேற்கொண்டு வந்தது. கரோனா பீதியால், இந்த ஆய்வுப் பணிகளையும் ஒத்தி வைக்கவேண்டும் என பேராசிரியா்கள் கோரிக்க விடுத்தனா்.
இந்த நிலையில், இணைப்பு அந்தஸ்த்து ஆய்வுப் பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. இதுதொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பல்கலைக்கழக ஆய்வுப் பணிகள் அனைத்தும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகின்றன. மீண்டும் ஆய்வுப் பணிகள் தொடங்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.