சென்னை: கரோனா தடுப்பு முயற்சியாக முக்கிய மோட்டார் நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக டி.வி.எஸ் நிறுவனம் சார்பில் மார்ச் 23-ஆம் தேதி முதல் 2 நாள்களுக்கு அனைத்து உற்பத்தி சார்ந்த பணிகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நிலைமைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே போல், திங்கள்கிழமை முதல் அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை சென்னையின் உற்பத்தி நடவடிக்கை அனைத்தும் நிறுத்தப்படுவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயத்தில், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைப் பொருத்தவரை, உலகளவில் அனைத்து பணிகளும் மார்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நாள்களில் ஊழியர்கள் வீட்டில் இருந்த பணியாற்றுமாறு அறிவுறுத்திய அந்த நிறுவனம், ஊதியப் பிடித்தம் செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.