சென்னை: கரோனா வைரஸ் தொற்று பதற்றம் தணிந்த பின்னர் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கிடையே, கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை தரப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுசெயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், "தேர்வு மையங்கள், விடைத்தாள் திருத்தும் இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூட்டமாக ஆசிரியர்கள் வர வாய்ப்புள்ளது. இவை நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் அந்தப் பணியை தமிழக அரசு ஒத்திவைக்க வேண்டும்' என்றார்.
இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "விடைத்தாள் திருத்தும் பணிகளை ஒத்திவைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்றனர்.