சென்னை: சென்னையில் உதவி ஆணையர் உள்பட 8 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், காவல்துறையினரும் அதற்கு தப்பவில்லை. சென்னையில் கரோனாவில் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ராஜாஅண்ணாமலைபுரம் போர்ட் கிளப் சாலையில் உள்ள மருதம் வளாகத்தில் செயல்படும் தமிழக காவல்துறையின் கமாண்டோ படையைச் சேர்ந்த 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல, அண்ணாசாலையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த ஒரு காவலர், வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவுப்பிரிவின் ஒரு உதவி ஆணையர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறையில் திங்கள்கிழமை மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை காவல்துறையில் ஏற்கெனவே 4 காவல் உதவி ஆணையர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையில் இது வரை மொத்தம் 270 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.