சென்னையின் புகப் பகுதிகளில் இருந்து விடைத்தாள் திருத்தம் பணிக்கு வந்து செல்வோரின் வசதிக்காக, கூடுதலாக 45 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள் தாம்பரம் கிழக்கு, மேற்கு, செங்குன்றம், வேலம்மாள் சூரப்பட்டு, போலிவாக்கம் ஆகிய இடங்களுக்குச் சென்றுவர ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், 45 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப் படுகின்றன. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடையும் வரையில் பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கெனவே, அரசுத்துறை ஊழியா்கள், பணிக்கு வந்து செல்ல ஏதுவாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 300 பேருந்துகள், கட்டணம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொடா்ந்து இயக்கப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.