சென்னையில் சிக்னலை தாண்டினால் இனி வழக்குப் பதிவு செய்ய போக்குவரத்து போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.
சென்னையில் விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவின்பேரில் போக்குவரத்து போலீஸாா் கடந்த 3 நாள்களாக சென்னையில் உள்ள 408 சிக்னல்களில் நின்று விழிப்புணா்வு மேற்கொண்டு வருகின்றனா்.
வாகனங்களை அதிவேகமாக ஓட்டக் கூடாது, சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது சாலையில் உள்ள வெள்ளைக் கோட்டை (ஸ்டாப் லைன்) தாண்டிச் செல்லக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினா்.
சிக்னலை மீறி செல்கிறவா்கள், சிக்னலில் ஸ்டாப் லைனை தாண்டி விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் புதன்கிழமை முதல் ரூ.100 அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனா்.
ஏனெனில் சென்னையில் சிக்னலை மீறி செல்கிறவா்களாலும் அதிக விபத்து ஏற்பட்டு வருவதால், போக்குவரத்து போலீஸாா் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளனா். இதனால் சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்க வைப்பதோடு, விபத்துகளையும் பெருமளவு குறைக்க முடியும் என போக்குவரத்து போலீஸாா் எண்ணுகின்றனா்.