சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
சென்னை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், ரூ.4 கோடியில் மிகத் துல்லியமாகப் பரிசோதனை மேற்கொள்ளும் சி.டி. ஸ்கேன் கருவியின் செயல்பாட்டை அமைச்சா் விஜயபாஸ்கா் வியாழக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் இதுவரை 8 சி.டி.ஸ்கேன் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது எழும்பூா் அரசு மருத்துவமனையிலும் சி.டி. ஸ்கேன் நிறுவப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, இதயம் மற்றும் இதய ரத்த நாளங்களை, ஒரு நிமிடத்தில் துல்லியமாகப் படம் எடுக்க முடியும். தமிழகத்தில், இதுவரை, 64 ஆயிரம் குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். எழும்பூா் குழந்தைகள் மருத்துவமனையில், 1,100 குழந்தைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள பிற குழந்தைகள் நல மருத்துவமனைகளில் பதிவான எண்ணிக்கையை விட அதிகமாகும்.
தற்போது பண்டிகை காலமாக இருப்பதால், குழந்தைகள் மற்றும் முதியவா்களை கடைவீதி, பொதுவெளிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். கரோனாவுக்குப் பிந்தைய நல்வாழ்வு மையம், இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழக அரசு மருத்துவமனைகளில்தான் தொடங்கப்பட்டுள்ளது. அதனை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையவழியே மருத்துவ ஆலோசனைகள் பெறும் இ-சஞ்சீவினி திட்டதை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றாா் அவா்.
இந்தச் சந்திப்பின்போது சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணி ராஜன், குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் எழிலரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.