தாம்பரம்: சர்வதேச அளவில் அனைத்து மக்களின் சமூக,பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் மகத்தான சக்தியாக கல்வி திகழ்கிறது என்று தேசியத் தர மதிப்பீட்டுக்குழுத் தலைவர் பேராசிரியர் வீரேந்தர் சிங் சௌகான் கூறினார்.
சென்னை பல்லாவரம் வேல்ஸ் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
சமூகம், பொருளாதாரம் உள்பட பல்வேறு துறை சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் மகத்தான சக்தியாகத் திகழ்ந்து வரும் கல்வியைத் தொடர்ந்து மேம்படுத்தும் பொறுப்பைப் பல்கலைக்கழகங்கள் மட்டுமல்லாமல்,உலகின் பல்வேறு நாடு களும் மேற்கொண்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட கல்வி,ஆராய்ச்சி நடவடிக்கைகள் மூலம் எதிர்வரும் சவால்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். சுய முன்னேற்றம், வேலைவாய்ப்புப் பெறுவதற்குதான் கல்வி அவசியம் என்று பலர் கருதுகின்றனர்.அந்த குறுகிய சிந்தனையில் இருந்து விடுபட்டு, பயின்ற கல்வி மூலம் தானும் பயன் அடைந்து, பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட முன்வர வேண்டும் என்றார் அவர்.
விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் உள்பட 2,800 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியக்குழு முன்னாள் தலைவர் ஹெச். தேவராஜ்,வேந்தர் ஐசரி கணேஷ், இணை வேந்தர் ஆர்த்தி கணேஷ்,துணைத் தலைவர் ஜி.ப்ரீதா கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.