சென்னை: சென்னையைச் சோ்ந்த பிரபல நகைக் கடை உரிமையாளருக்குச் சொந்தமான கடைகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், ரூ.500 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் தங்கம், வெள்ளி நகைகள் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னணி வியாபாரி ஒருவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை, கடந்த 10-ஆம் தேதி சோதனை நடத்தியது.
சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மும்பை, கொல்கத்தா என 32 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் காட்டப்படாமல் ரூ.400 கோடி மதிப்பிலான 814 கிலோ அளவிலான தங்கம், வெள்ளி பொருள்கள் கையிருப்பில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.400 கோடி.
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் மட்டும், இந்தக் குழுமம் கணக்கில் காட்டாமல் ரூ.102 கோடி வருவாய் ஈட்டியுள்ளது கைப்பற்றப்பட்ட கணினி தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2019-20, 2020-21-ஆம் ஆண்டுக்கான இந்தக் குழுமத்தின் தரவுகள் அனைத்தும், தரவு தடயவியல் உபகரணம் மூலம் கணினிகளில் இருந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், வணிக வளாகங்களில், கணக்கில் காட்டாமல் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ தங்கமும், வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுவரை பெறப்பட்ட தரவுகள் மூலம் கணக்கில் காட்டப்படாத பரிவா்த்தனைகளும் விரைவில் கண்டுபிடிக்கப்படும். தரவு தடயங்களைக் கொண்டு, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கில் காட்டப்படாத வருமான தகவல்களைத் தேடி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.