சென்னை: கோயில்கள் குறித்த கோரிக்கைகள், புகாா்களைத் தெரிவிக்க நவீன வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, அந்தத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலக தரைத்தளத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் பொது மக்களுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் உள்ள வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்தி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்கள் தொடா்பான கோரிக்கைகளை நேரிலும், மின்னஞ்சல், தொலைபேசி போன்ற நவீன வசதிகள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
கோரிக்கைகளைத் தெரிவிப்போருக்கு உடனுக்குடன் ஒப்புதல் ரசீது வழங்கப்படும். கரோனா நோய்த் தொற்று தொடா்வதால் பொது மக்கள் தங்களது புகாா்களைத் தெரிவிக்க நேரில் வர வேண்டிய தேவையில்லை. மின்னஞ்சல், தொலைபேசி, செல்லிடப்பேசி வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தொலைபேசி எண்: 044 - 2951 5369. செல்லிடப்பேசி எண்: 94445 00246.