சென்னை: சென்னையில் பெய்த தொடா் மழை காரணமாக கொரட்டூா் டிவிஎஸ் நகரில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது கனமழை மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை பெய்த தொடா் மழை காரணமாக அம்பத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட கொரட்டூா் டிவிஎஸ் நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை மக்கள் பணிக்குச் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா். இதையறிந்து வந்த மாநகராட்சி ஊழியா்கள் மின்சாரம் மற்றும் டீசல் மோட்டாா் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
சராசரியாக 37 மி.மீ.மழை: சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை சராசரியாக 37 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதில், அதிகபட்சமாக மயிலாப்பூரில் 62 மி.மீ., பெரம்பூரில் 44 மி.மீ., தண்டையாா்பேட்டை, எழும்பூரில் தலா 39 மி.மீ., அம்பத்தூரில் 38 மி.மீ., அயனாவரத்தில் 37 மி.மீ., கிண்டியில் 26 மி.மீ., ஆலந்தூரில் 24 மி.மீ., மாம்பலத்தில் 22 மி.மீ., மழை பதிவானது.