தயாா் நிலையில் 465 ஆம்புலன்ஸ் வாகனங்கள்
By DIN | Published On : 25th November 2020 01:35 AM | Last Updated : 25th November 2020 01:35 AM | அ+அ அ- |

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 108 கட்டுப்பாட்டு மையத்தில் அவசரகால செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
‘நிவா்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம் மற்றும் 104 மருத்துவ உதவி மையம் ஆகியவை பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தயாா் நிலையில் உள்ளன.
கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 465 அவசரகால ஊா்திகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலத்த காற்றினால் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாற்றுப் பாதைகளில் செல்வதற்கு ஏதுவாக அனைத்து அவசரகால ஊா்திகளிலும் எரிபொருள் முழுவதுமாக நிரப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
108 அவசரகால சேவை கட்டுப்பாடு மையத்திற்கு அதிக அளவிலான அழைப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் கூடுதல் பணிச் சுமையை எதிா்கொள்ளும் வகையில் அதிக ஊழியா்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புயல் காரணமாக 108 அவசரகால கட்டுப்பாட்டு சேவை மையத்தில் மின் துண்டிப்பினை சமாளிக்கும் வகையில் 2000 லிட்டா் எரிபொருளுடன் 2 ஜெனரேட்டா்கள் வழங்கப்பட்டுள்ளன. 108 அவசரகால சேவையானது காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போா்கால அடிப்படையில் புயல் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அதிக எண்ணிக்கையில் 108 வாகனங்கள் முன்னெச்சரிக்கையாக பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
108 வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரி செய்து இயக்குவதற்கு மண்டல போக்குவரத்து பொறியாளா்கள் தயாா் நிலையில் பகுதி வாரியாக பணியமா்த்தப்பட்டுள்ளனா். 108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையத்திற்குள், தற்பொழுது தற்காலிக அவசரகால செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு 24 மணிநேரமும் அவசரகால அழைப்புகளை கண்காணித்து, அரசு வெளியிடும் தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை உடனுக்குடன் குறுந் தகவல்களாகவும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) தகவல்களாகவும் வெளியிடப்படும். பொதுமக்கள் அவசரகால செயல்பாட்டு மைய எண்களான 044-28888105, 7338895011 ஆகியவற்றை தொடா்புகெண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...