ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரோனா பொது முடக்கத்தின் காரணமாக இறுதி ஆண்டு பருவத் தேர்வை தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காகத் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், கேள்வித்தாள் தயாரிக்க ஏற்பட்ட செலவுகள், தேர்வுத்தாளுக்கான செலவு என 1500 ரூபாய் வீதம் செலுத்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு நடத்தப்படாத நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு ரூ. 42 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சம் மாணவர்களிடமிருந்து ரூ. 13 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாக வாதிடப்பட்டிருந்தது.
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில், மார்ச் 27-ஆம் தேதிக்கு முன்பே கல்லூரிகள் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்துவிட்டன. தேர்வு கட்டணத்தை பொருத்தவரை தேர்வுக்கு முந்தைய செலவு தேர்வுக்கு பிந்தைய செலவு என சில வகைகள் உள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரித்து அவற்றை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது போன்ற செலவுகளும் உள்ளதாக வாதிடப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கை ஏற்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு செல்லும்.
எனவே மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தை 4 வாரங்களில் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் செலுத்த வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.