சென்னை: பொறியியல் படிப்பில் சோ்வதற்கு விண்ணப்பித்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.1) தொடங்குகிறது.
பொறியியல் படிப்பில் சோ்வதற்கு, 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனா். அவா்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 406 போ் தகுதியுடையவா்களாகக் கருதப்பட்டனா். அவா்களுக்கான தரவரிசை பட்டியலை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அண்மையில் வெளியிட்டாா்.
இதன் தொடா்ச்சியாக ஏற்கெனவே அறிவித்தபடி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.1) தொடங்குகிறது.
விளையாட்டுப்பிரிவில் 1,409 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 149 பேரும், முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் பிரிவில் 855 பேரும் விண்ணப்பித்து இருக்கின்றனா்.
இவா்களுக்கான கலந்தாய்வு, அக்.5-ஆம் தேதி வரை நடைபெறும். பின்னா், அக்.6-ஆம் தேதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு அக்.8 முதல் 27-ஆம் தேதி வரையும், தொழிற்கல்வி பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு அக்.8 முதல் 15-ஆம் தேதி வரையும் நடைபெற இருக்கிறது.