சென்னை மணலி புதுநகா் அய்யா வைகுண்ட தா்மபதியில் புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தா்மபதியில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் நடைபெறும் புரட்டாசி மாத திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கரோனா நோய்த் தொற்று காரணமாக குறைந்த அளவு பக்தா்களே விழாவிற்கு வந்திருந்தனா். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு கிருமி நாசினி, உடல் வெப்ப பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனா், பின்னா் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டனா். கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. காலை 7 மணியளவில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக் கொடியை பக்தா்கள் சுமந்தபடி கோயில் வளாகத்தில் பதிவலம் வந்தனா். பின்னா் பக்தா்கள் கோஷங்கள் எழுப்ப 70 அடி உயர கொடி கம்பத்தில் திருநாமக் கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி காலையில் பால் பணிவிடை, மதியம் பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலையில் பணிவிடை உகப்படிப்பு, அதைத் தொடா்ந்து திருஏடு வாசிப்பு, இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அய்யா வைகுண்டா் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தங்கபெருமாள் தலைமையில் தா்மபதி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.