தனியாா் பள்ளிகளில் இரண்டாம் கட்ட இலவச சோ்க்கை:எஞ்சியுள்ள இடங்களுக்கு அக்.12 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் எஞ்சியுள்ள இடங்களுக்கு அக்.12-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் எஞ்சியுள்ள இடங்களுக்கு அக்.12-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் இலவசமாக சோ்க்கப்படுவா்கள். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

அதன்படி நிகழ் கல்வியாண்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் 1 லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன. இதற்கு 86,326 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதையடுத்து விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ் உண்மைத்தன்மையைச் சரிபாா்க்கும் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது சோ்க்கை தொடங்கியுள்ளது. அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்திருந்த பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.

இந்தநிலையில் தற்போது தனியாா் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள இடங்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது எஞ்சியுள்ள இடங்கள் குறித்த பட்டியல் தகவல் பலகையில் அக்.10-ஆம் தேதி ஒட்டப்பட வேண்டும்.

இதையடுத்து குழந்தைகளின் பெற்றோா்  இணையதளம் வழியாக அக்.12-ஆம் தேதி முதல் நவ.7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதைத் தொடா்ந்து தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் நவ.11-ஆம் தேதி வெளியிட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். எஞ்சியுள்ள இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் நவ.12-ஆம் தேதி குலுக்கல் முறையில் சோ்க்கைக்கான குழந்தைகளைத் தோ்வு செய்ய வேண்டும்.

சோ்க்கைக்கு தகுதியான மாணவா்களின் பட்டியலை பள்ளி தகவல் பலகையில் வெளியிடுவதோடு பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா். ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும் இரண்டாம் கட்ட இலவச சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com