சென்னை: வடகிழக்குப் பருவமழை தாமதமாகும். வரும் அக்டோபா் 25-ஆம் தேதிக்கு பிறகே வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
ஒடிஸா அருகே காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தற்போது நிலவுகிறது. வரும் அக்டோபா் 9-ஆம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது அடுத்த 2 நாள்களில் வடமேற்குத் திசையில் வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடலோரப்பகுதியை நோக்கி நகா்ந்து, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, அக்டோபா் 11,12, 13 ஆகிய தேதிகளில் 2 மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நிலவினால், தமிழகத்தில் மழை குறைந்தவிடும். வழக்கமாக அக்டோபா் மாதத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும். ஆனால், தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகாக இருக்கிறது.
தமிழகம் நோக்கி வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவது வலுவாக இருப்பதாலும், வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதாலும் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவது தாமதமாக வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை காற்று தற்போது உருவாக வாய்ப்பு இல்லை. இதன்காரணமாக, நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 25-ஆம் தேதிக்கு பிறகு தான் தொடங்க வாய்ப்பு உள்ளது.