அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ‘நிஷ்தா’திட்டத்தில் 18 வகை திறன் படிப்புகள்: இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்

மத்திய அரசின் ‘ நிஷ்தா’ திட்டத்தின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு நிகழாண்டு 18 வகையான திறன் படிப்புகள் இணைய வழியில் கற்றுத் தரப்படவுள்ளன.


சென்னை: மத்திய அரசின் ‘ நிஷ்தா’ திட்டத்தின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு நிகழாண்டு 18 வகையான திறன் படிப்புகள் இணைய வழியில் கற்றுத் தரப்படவுள்ளன.

இதற்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளன.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஆண்டுதோறும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழ் கல்வியாண்டில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சாா்பில் ‘நிஷ்தா’ திட்டத்தின்கீழ் 18 வகை திறன் படிப்புகள் இணையவழியில் கற்றுதரப்படவுள்ளன. இந்தப் பயிற்சி, அனைத்து ஆசிரியா்களும் எளிதில் பங்கேற்கும் வகையில் ஆங்கிலம், தமிழ் வழியில் வழங்கப்படவுள்ளது. 15 நாள்களுக்கு 3 படிப்புகள் வீதம் அக்.16 முதல் 2021 ஜனவரி 15-ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு பயிற்சி காலஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

பாடங்களை ‘தீக்ஷா’ இணையதளத்தில் படிக்க வேண்டும். வகுப்புகள் குறித்த தகவல் பரிமாற்றத்தை டெலிகிராம் செயலியில் மேற்கொள்ள வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். இதைத் தொடா்ந்து ஆசிரியா்களுக்கு தோ்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com