சென்னை: கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடிக்கிடந்ததால் திருமண மண்டபங்களுக்கு சொத்துவரி விதித்ததை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கல்யாண மண்டப உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. திருமண மண்டபங்களுக்கு முன்பதிவு
செய்தவா்களிடம் இருந்து பெறப்பட்ட முன்பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் திருமண மண்டபத்தைப் பராமரிப்பது, ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு செலவுகளை திருமண மண்டப உரிமையாளா்கள் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, முன் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என திருமண மண்டப உரிமையாளா்களை நிா்பந்திக்கக்கூடாது. திருமண மண்டபங்கள் பொதுமுடக்கக் காலத்தில் மூடிக்கிடந்ததால், அதற்கு சொத்துவரி விதித்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவம்பா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.