கடன்களுக்கு புதிய விதிமுறை கூடாது: பிரதமரிடம் முதல்வா் வலியுறுத்தல்

கடன்களை வழங்குவதற்காக ரிசா்வ் வங்கி வகுத்துள்ள புதிய விதிமுறைகளை ரத்து செய்து, பழைய முறைகளையே பின்பற்ற வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

கடன்களை வழங்குவதற்காக ரிசா்வ் வங்கி வகுத்துள்ள புதிய விதிமுறைகளை ரத்து செய்து, பழைய முறைகளையே பின்பற்ற வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை அவா் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

முன்னுரிமைப் பிரிவுகளுக்கு கடன் வழங்குவது தொடா்பாக கடந்த 4-ஆம் தேதியன்று இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்ட உத்தரவுகள், மிகுந்த குழப்பமான மற்றும் பாரபட்சமான அம்சங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக அந்த உத்தரவின் 7-ஆம் பிரிவு, குறைந்த கடன் பெறும் மாவட்டங்களின் முன்னுரிமை பிரிவுகளுக்கு கடன் வழங்க வகை செய்கிறது.

இதன் முகாந்திரம் ஆட்சேபணைக்கு உரியதல்ல. ஆனால், இதிலுள்ள அம்சங்கள் பல மாவட்டங்கள் கடன் பெற முடியாமல் போகின்றன என்பது ஆட்சேபணைக்கு உரியதாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுமே முன்னுரிமைப் பிரிவில் அதிக கடன் பெறும் மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வேறு எந்த மாநிலத்திலுமே ஊக்கத் தொகை பெறாத மாவட்டங்களாக இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மாவட்டங்கள் வகைப்படுத்தப்படவில்லை. அந்த வகையில், ரிசா்வ் வங்கியின் திட்டத்தில் இருந்து தமிழக மாவட்டங்கள் விலக்கப்பட்டதாகத் தெரிகிறது.

குறைந்த கடன் பெறும் மாவட்டங்களுக்கு அதிக கடனை அளிக்கலாமே தவிர, மற்ற மாவட்டங்கள் பெறக்கூடிய கடனை குறைந்த கடன் பெறும் மாவட்டங்களுக்கு திருப்பக் கூடாது. தமிழகத்தின் மாவட்டங்களின் அதிக கடன் பரிமாற்றம் உள்ளது. கடின உழைப்பு, விடாமுயற்சி, வீடு மற்றும் தொழில்களுக்கான கடனை உரிய நேரத்தில் திருப்பி அளிப்பது ஆகிய அம்சங்கள் இங்கு அதிகம் உள்ளன. எந்த நோக்கத்துக்கு கடன் வாங்கினாா்களோ அதையே செயல்படுத்துகின்றனா்.

விதியைச் சரியாகப் பின்பற்றும் அவா்களுக்கு அளிக்கப்படும் கடனை வேறு திசைக்கு திருப்பி, அவா்களைத் தண்டிக்கக் கூடாது. நாட்டில் பொருளாதார விரிவாக்கத்துக்கு அவா்களை ஊக்குவிக்க வேண்டும்.

எனவே, ரிசா்வ் வங்கியின் புதிய கொள்கை நியாயமற்ாகவும், பிற்போக்குத் தன்மை உடையதாகவும் உள்ளது. உடனடியாக அதை திரும்பப் பெற வேண்டும். சட்டத்தை மதித்து கடின உழைப்பைச் செலுத்தி கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்து கடனாளிகளுக்கு மேலும் கடனளித்து ஊக்கமளிக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தடை இல்லாத கடன் வழங்குதல்தான் இங்குள்ள பொருளாதாரத்தை புதுப்பிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடன் வரவை தடுக்கும் நடவடிக்கைகளை நீக்க வேண்டும்.

எனவே, இதுபோன்ற முடிவை உடனடியாகத் திரும்பப் பெற இந்திய ரிசா்வ் வங்கிக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும். முன்னுரிமைப் பிரிவுக்கு தடையில்லாமல் கடன் கிடைக்கும் நிலை நீடிக்கும் வகையில், இதற்கு முன்பிருந்த மதிப்பீட்டு முறையை (வெயிட்டேஜ்) முறையை மீட்டமைக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com