சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்தது தவறான முடிவு என ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள், முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளைப் பின்பற்றியே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இந்த விவகாரம் குறித்து ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரியர் தேர்வு ரத்து செய்வது தவறான முடிவு. இதுதொடர்பாக சூரப்பாவுக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தேன்.
ஆனால், என்னிடம் இருந்து தமிழக அரசுக்கோ அல்லது தமிழக அரசிடம் இருந்து எனக்கோ தேர்வு நடத்துவது தொடர்பாக எந்தக் கடிதத் தொடர்பும் இல்லை. அரியர் தேர்வு ரத்து குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கின் விசாரணையின் போது தனது நிலைப்பாட்டை ஏஐசிடிஇ தெரிவிக்கும்' எனத் தெரிவித்தார். அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.