சென்னை: பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவனம், புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு அளித்த பொது முடக்கத் தளா்வையடுத்து, முதல்கட்டமாக விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை, திங்கள்கிழமையும் (செப்.7), பரங்கிமலையிலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வழித்தடத்தில், மெட்ரோ ரயில் சேவைகள் புதன்கிழமையும் மீண்டும் தொடங்கப்பட்டன. அதே நேரம், சென்ட்ரல், பரங்கிமலை இடையேயும், சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கும் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்களின் சேவை வியாழக்கிழமை (செப்.10) முதல் மீண்டும் தொடங்கும்.
அலுவலக நேரங்களில் (காலை 8.30 முதல் 10.30 மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை) 5 நிமிஷ இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிஷ இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். குறிப்பாக பயணிகளின் கோரிக்கையை ஏற்று, வியாழக்கிழமை (செப்.10) முதல் நாள்தோறும் காலை 7 முதல் இரவு 9 மணி வரை, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். எனவே, பயணிகள், கரோனா முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி, மெட்ரோ ரயில்களில் பயணிக்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.